சென்னை, ஜூலை 16: வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களை நேரில் சந்தித்து, புதிய அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இராஜகம்பள சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கியதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைமைக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
சங்கத்தின் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் குழு, நேற்று (15.07.2026) தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தது.
அப்போது, அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து வழங்கி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதேவேளை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியில் இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) சமுதாயத்தைச் சேர்ந்த பொன். காசிராம் அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் மாண்புமிகு புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான ச. ஜோசப் விஜய் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சருமான மாண்புமிகு ம. விஜய் பாலாஜி அவர்களையும் சந்தித்து, புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அமைச்சரிடம் கோரிக்கை மனு!
இந்த சந்திப்பின் போது, இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மஹாஜன சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இராஜா அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அருட்பிரசாதத்தை வழங்கி மரியாதை செலுத்தியதுடன், சமுதாயம் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார்.
சந்திப்பிற்கான ஏற்பாடு!
தமிழக அமைச்சர்களுடனான இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை, இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழக வெற்றிக் கழக பிரமுகருமான என். பவுல்ராஜ் மேற்கொண்டிருந்தார்.
உடனிருந்த நிர்வாகிகள்!
இந்தச் சந்திப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ், துணைத் தலைவர் ஆர். பெருமாள், அமைப்புச் செயலாளர் ஆர். சுந்தர்ராஜ், துணைச் செயலாளர் எ. முருகன், ஒருங்கிணைப்பாளர் த. சுப்பிரமணியன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். ஆறுமுகச்சாமி, ஆர். பெருமாள், பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு, புதிய அரசுடன் இராஜகம்பள சமுதாயத்தின் நல்லுறவையும், சமூகத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்ததற்கான நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.